டொக்டர் ஸில்மியின் நரம்பியல் ஆய்வு சர்வதேச தரத்தில் பாராட்டை பெற்றுள்ளது
✒️றியாஸ் ஆதம்
சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.பி.எம்.முஹம்மட் ஸில்மி மேற்கொண்ட நரம்பியல் நோய்களின் சுமையை மதிப்பிடுதல் பற்றிய ஆய்வு நரம்பியல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வெளிப்படுத்தி விருதினை வென்று சர்வதேச தரத்தில் அங்கீகாரத்தினையும் பெற்றுள்ளது.
உலக நரம்பியல் சம்மேளனத்துடன் இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கம் (ASN) ஏற்பாடு செய்த நரம்பியல் ஆராய்ச்சி மாநாடு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. பல்வேறு நாடுகளினதும் வைத்திய நிபுணர்கள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்ட இம்மாநாட்டில் குறித்த ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டு சகலரினதும் வரவேற்பினைப் பெற்று மூன்றாமிடத்தினை பெற்றுக்கொண்டது.
அத்துடன் "கல்முனை சுகாதார மாவட்டத்தில் நரம்பியல் நோய்களின் சுமையை மதிப்பிடுதல்" எனும் தலைப்பிலான டொக்டர் சில்மியின் விருது வென்ற ஆய்வுக் கட்டுரை இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் (ASN) - 2025 மாநாட்டின் ஆய்வுச் சுருக்க புத்தகத்திலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவின் பொறுப்பதிகாரியான டொக்டர் முஹம்மட் ஸில்மி தலைமையிலான டொக்டர் எம்.ஐ.எம்.எஸ்.இர்ஷாத், டொக்டர் ஏ.எப்.எப்.அஸ்மா ஆகியோர் கொண்ட குழுவினரினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் குறித்த ஆய்வானது இலங்கையின் கிராமப்புற சுகாதார அமைப்புக்களில் கூட இருக்கும் மருத்துவ நிபுணத்துவத்தின் அளவை நிரூபிக்கும் வகையில் நரம்பியல் துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம், ஓட்டமாவடி, மீராவோடையினைனை பிறப்பிடமாகவும் சாய்ந்தமருது பிரதேசத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட டொக்டர் ஸில்மி, இதற்கு முன்னர் சின்னம்மை (Chicken pox), கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் ஆஸ்துமா நோய் தொடர்பாகவும் ஆய்வு செய்து கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.
இவரது ஆய்வுக் கட்டுரைகள் வைத்திய சங்கங்களின் வருடாந்த மாநாடுகள், மருத்துவ சஞ்சிகைகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. கல்முனை சுகாதார மாவட்டத்தில் நரம்பியல் நோய்களின் சுமையை மதிப்பிடுதல் எனும் இந்த ஆய்வுக் கட்டுரையானது, இவரது நான்காவது வெளியீடு என்பதும் குறிப்பிடத்தக்கது.