தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் வரவு செலவுத் திட்ட விவாதங்களில் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பிரதேசங்களில் காணப்படும் பிரச்சினைகளை, அபிவிருத்தி சார்ந்த விடயங்களை முன்வைத்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனாலும், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச அபிவிருத்தி குழுத்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் நிறைய காணிப்பிரச்சினைகள், நிர்வாக பிரச்சினைகள், அபிவிருத்தி பிரச்சினைகள் உட்பட பல பிரச்சினைகள் இருக்கத்தக்கதாக எதுவும் பேசாமல் இருப்பது ஏன் என அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் புத்திஜீவிகள் உட்பட பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள்தான் இப்பிரதேசத்தில் குறைபாடுகள் உள்ள பல இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டவர் மட்டுமல்லாமல் கரையோரப் பிரதேசங்களில் இடம்பெறும் அனைத்து பிரதேச அபிவிருத்தி கூட்டங்களுக்கும் தலைமை வகித்து பிரதேசங்களில் உள்ள பிரச்சினைகளை தெளிவாக நன்கு அறிந்து கொண்டிருப்பவர்.
இந்த நிலையில் அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் இப்பிரதேசங்களில் இருந்து கொண்டிருக்கும் குறைபாடுகளை ஒவ்வொரு அமைச்சின் நிதி ஒதுக்கீடு விவாதத்தில் நாடாளுமன்றத்தில் பேசி தெளிவுபடுத்தாமல் மெளனமாக இருப்பது ஏன் என்றும் புத்திஜீவிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் இருக்கும் ஒரே ஒரு ஆளும்தரப்பு முஸ்லிம் எம்.பி ஆதம்பாவா மட்டுமே. 4+4=10 என்ற அவரது முதலாவது உரைக்கு பிறகு அவர் பாராளுமன்றத்தில் வாய்திறக்காமல் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஜுனைதீன்