திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதற்கும் அதன் சுகாதார சேவையினை மேம்படுத்துவதற்கும்
ஒத்துழைப்புக்களை வழங்கி செயற்பட போவதாக திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் தெரித்தார்.
திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் அடிப்படை வசதிகள் மற்றும் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.பி.மசூத்தின் அழைப்பின் பேரில் தவிசாளர் சசிகுமார் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் சிலரும் (27) குறித்த வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டனர்.
வைத்தியசாலையின் நிலமைகளை நேரில் பார்வையிட்ட தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் அதன் பௌதீக வளப்பற்றாக்குறை உட்பட அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் வைத்திய அத்தியட்சகரிடம் கேட்டறிந்துகொண்டனர். பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு, வைத்திசாலையின் சேவையினை மேம்படுத்துவதற்கு தன்னாலான உதவிகளை செய்வதாகவும் இதன்போது தவிசாளர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து வைத்தியசாலையின் பௌதீக வள செயற்பாடுகளை மேம்படுத்தும் பொருட்டு பின்வரும் செயற்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
வைத்தியசாலை வளாகத்தில் காணப்படும் தேவையற்ற சிறிய மரங்கள் மற்றும் கற்களை அகற்றி நிலத்தை ஒழுங்கமைத்தல், மழை காலங்களில் தேங்கும் வெள்ள நீரை வெளியேற்ற வடிகான் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல், வைத்தியசாலை மற்றும் அதனையன்டிய பகுதிகளில் புதிதாக மின்விளக்குகளை பொருத்தி வெளிச்சத்தை ஏற்படுத்துதல், பாதைகளை விஸ்தரித்தல், வைத்தியசாலை கழிவு நீரை சுத்திகரிக்க தேவையான உபகரணங்களை பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு விடங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.