வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழை காலத்தில் டெங்கு நுளம்பு பெருக்கம் ஏற்பட்டு டெங்கு நோய்த் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதனால் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டத்தினை கல்முனை பிராந்திய தொற்று நோய்த்தடுப்பு பிரிவு முன்னெடுத்துள்ளது.
அந்தவகையில் கல்முனை பிராந்திய டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டமொன்று (17) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை வழிகாட்டலில் பிராந்திய தொற்று நோய் தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.றிஸ்பின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், சுகாதார வைத்திய அதிகாரிகள், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது கல்முனை பிராந்தியத்தில் உள்ள சகல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் மேற்கொள்ளப்படும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன் எதிர்வரும் பருவப் பெயர்ச்சி மழை காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் சம்மந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.
பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.றிஸ்பின், சுகாதார பூச்சியல் உத்தியோகத்தர் கே.ஏ.ஹமீட் ஆகியோர் டெங்கு outbreak முகாமைத்துவம் மற்றும் டெங்கு ஆய்வு தொடர்பாக விளக்கமளித்தனர்.