வவுனியாவில் மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது!
வவுனியாவில் மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா, வேப்பங்களும் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து போதை மாத்திரை வியாபாரம் செய்யப்படுவதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பொலிஸ் குழுவினர் சந்தேகத்திற்கிடமான குறித்த வீட்டை சுற்றி வளைத்து சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 180 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த 20 மற்றும் 29 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளில் குறித்த போதை மாத்திரைகள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.